தமிழக மீனவர்கள் கைதுக்கு நிரந்தர தீர்வு எப்போது?

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை வழக்கம்போல் தொடங்கிவிட்டது.

Update: 2024-07-15 00:35 GMT

சென்னை,

வங்கக்கடலில் பிறப்பிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலத்துக்கு பிறகு, கடந்த மாதம் 15-ம் தேதி முதல்தான் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அதே நேரத்தில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கையும் வழக்கம்போல் தொடங்கிவிட்டது.

தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரை இருக்கிறது. இதிலுள்ள 13 கடலோர மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மீனவர்களுக்கு பிழைப்பு என்பது கடலில் போய் மீன் பிடிப்பதில்தான் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக கடலே தங்கள் வாழ்க்கையாக கொண்டிருக்கும் இந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது, கரணம் தப்பினால் மரணம் என்பது போல பெருமழை, கடுங்குளிர், ஆர்ப்பரித்து எழும் அலை, பெரும் புயல் என்று பல இயற்கைச் சீற்றங்களை சந்தித்துதான் கரைக்கு திரும்ப வேண்டிய நிலை இருக்கிறது. கடலுக்கு போகும் நேரத்தில் எல்லாம் படகு நிறைய கொண்டுவரும் அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை.

கடலுக்கு போய் திரும்பி வந்தால்தான் நிச்சயம் என்று வாழ்ந்துவரும் மீனவர்களுக்கு இயற்கை சீற்றங்களையும் தாண்டி, இலங்கை கடற்படையினரின் கைது படலமும் ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுகிறார். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்புகிறார். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் இந்திய அரசாங்கத்தின் வற்புறுத்தலால் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும், வலைகளும் திரும்ப ஒப்படைக்கப்படுவதில்லை.

இப்படி ஏராளமான படகுகள் இலங்கை துறைமுகங்களில் பராமரிப்பின்றி பாழாய்ப் போய்கிடக்கின்றன. படகுகள் இல்லாமல் மீனவர்களுக்கு வாழ்க்கையே இல்லை. கடலில் நீந்திப்போயா மீன்பிடிக்க முடியும்?. அதன்பிறகு, வாழ்வாதாரம் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் நிலைதான் இருக்கிறது. கடைசியாக இப்போது புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில், 3 படகுகளில் சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை சிறையில் அடைத்துள்ளனர்.

உடனடியாக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 80 மீனவர்களையும் 173 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியுள்ளார். தொடர் கதையாக இருக்கும் தமிழக மீனவர் கைது நிகழ்வுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, ஒரு நிரந்தர தீர்வு காண புதிய வழியை காண வேண்டும்.

ஏற்கனவே இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளைக்கொண்டு அமைக்கப்பட்டிருந்த கூட்டு பணிக்குழுவை உடனடியாக புதுப்பித்து நிரந்தர தீர்வு காண இரு அரசாங்கங்களும் முயற்சிகளை தொடங்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் சகோதரர்கள்தான். அவர்களையும் ஒன்றாக உட்கார வைத்து ஒரு குடும்ப பிரச்சினையைப் பேசி தீர்ப்பதுபோல, ஒரு நல்ல தீர்வு ஏற்பட முயற்சி எடுக்க வேண்டும். இந்த தீர்வு எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் கைது என்பதும், படகுகள் பறிமுதல் என்பதும் இல்லாத ஒரு நிலையை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்