அவசர நிலையை கொண்டுவந்தவர்களால் அரசியலமைப்பை நேசிக்க முடியாது; காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு

அவசர நிலையை கொண்டுவந்தவர்களால் அரசியலமைப்பை நேசிக்க முடியாது என்று காங்கிரசை பிரதமர் மோடி சாடினார்.

Update: 2024-06-25 08:18 GMT

டெல்லி,

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்ட காலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவசர நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். 2 ஆண்டுகளாக நீடித்த அவசர நிலை இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக ஆட்சியமைத்த உடன் 1977 மார்ச் 21ம் தேதி திரும்பப்பெறப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அவசர நிலைக்கு எதிராக போராடிய சிறந்த ஆண்கள், பெண்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இன்று. ஒவ்வொரு இந்தியரும் சிறப்பாக மரியாதை வைத்துள்ள அரசியலமைப்பு சாசனத்தை காங்கிரஸ் எவ்வாறு மிதித்து அடிப்படை சுதந்திரத்தை ஒடுக்கிய அவசரநிலையின் இருண்ட நாட்களை நினைவு படுத்துகிறது.

அதிகாரத்தை பிடிப்பதற்காக காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தின் அனைத்து நெறிகளையும் மீறி ஒட்டுமொத்த நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றியது. காங்கிரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த அனைவரும் துன்புறுத்தப்பட்டனர். சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை குறிவைத்து பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவசர நிலையை அமல்படுத்தியவர்களால் நாட்டில் அரசியலமைப்பை நேசிக்க முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்