நடத்தையில் சந்தேகம்; மனைவி முகத்தில் 'அயர்ன்பாக்ஸ்' சூடு - வாலிபருக்கு வலைவீச்சு

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியின் முகத்தில் அயர்ன்பாக்சால் சூடு வைத்த வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2024-06-14 21:15 GMT

மதுரை ,

மதுரையில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் அழகர்சாமி. சலவை தொழிலாளி. இவருடைய மகள் ஹேமலதா (வயது 24). இவருக்கும், மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் வெள்ளையம்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஹேமலதாவுக்கு அதே ஊரைச்சேர்ந்த வீரபாபு (24) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெரிந்ததும் ஹேமலதாவை, கணவர் கண்டித்தார். ஆனாலும் அவர் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை.

இதனால் ஹேமலதாவை அவருடைய கணவர் விவகாரத்து செய்தார். அதே நேரம் 2 மகள்களையும் அவர் தன்னுடனே வைத்துக்கொண்டார்.

இதையடுத்து ஹேமலதா கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். வீரபாபு தனது கள்ளக்காதலியை தேடி கேரளா சென்றார்.

அங்கு அவர், ஹேமலதாவை அழைத்துக்கொண்டு பாலக்காட்டில் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு மதுரை பரவை சத்தியமூர்த்தி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்தனர். ஹேமலதா பரவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இருப்பினும் ஹேமலதா நடத்தை மீது வீரபாபு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக ஹேமலதா, குளித்து விட்டு, குளியலறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த வீரபாபு, தான் மறைத்து வைத்திருந்த சூடுப்படுத்திய மின்சார 'அயர்ன்பாக்சை' எடுத்து ஹேமலதாவின் முகத்தில் அழுத்தி சூடு வைத்தார்.

இதில் முகம் வெந்து ஹேமலதா அலறினார். உடனே அங்கிருந்து வீரபாபு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து சமயநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய வீரபாபுவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்