வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
Live Updates
- 31 July 2024 8:55 AM GMT
வயநாடு: காணாமல் போனோர் பற்றி தகவல் தெரிவிக்க உதவி எண் வெளியீடு
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றி தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வயநாடு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போனோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் பற்றி தகவல் தெரிவிக்கவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 31 July 2024 8:08 AM GMT
வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் இணைந்த கடற்படை
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராணுவம், விமானப்படையுடன் கடற்படையும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.
- 31 July 2024 7:51 AM GMT
பலி எண்ணிக்கை உயர்வு
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.
- 31 July 2024 7:27 AM GMT
வயநாடு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 தமிழர்கள் உயிரிழப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- 31 July 2024 7:16 AM GMT
கேரள முதல்-மந்திரி அவசர ஆலோசனை
நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
- 31 July 2024 5:27 AM GMT
பலி எண்ணிக்கை உயர்வு
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
- 31 July 2024 5:11 AM GMT
வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடி உன்னிப்பாக கவனிப்பு
வயநாடு நிலச்சரிவு சம்பவம் மற்றும் அது தொடர்பான மீட்புப்பணிகளை பிரதமர் மோடி மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மீட்புபணியில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
- 31 July 2024 3:44 AM GMT
விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தார். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீணா ஜார்ஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.