தலையங்கம்

மகாத்மா காந்தி பெயரை மாற்ற வேண்டுமா?


மகாத்மா காந்தி பெயரை மாற்ற வேண்டுமா?
18 Dec 2025 5:17 AM IST

வேலைவாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசிப்பிணியை போக்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மத்திய அரசாங்கமே முழுக்க கொடுத்து வருகிறது. ஆனால் இந்த திட்டத்துக்கான பொருட்கள், உபகரணங்கள் வாங்கும் செலவில் மத்திய அரசாங்கம் 75 சதவீதமும், மாநில அரசுகள் 25 சதவீதமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருந்தது. மகாத்மா காந்தி பெயரிலான இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பல குறைபாடுகள் கூறப்பட்டாலும் கிராமப்புறங்களில் பல உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன.

தினக்கூலியாக ரூ.100 கொடுக்கப்பட்ட தொகை அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்த்தப்பட்டு கொண்டே வந்தது. அந்தவகையில், தமிழ்நாட்டில் இப்போது மத்திய அரசு தினமும் ரூ.336 வழங்கி வருகிறது. இந்த தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அண்டை மாநிலங்களான கேரளாவில் ரூ.369, கர்நாடகாவில் ரூ.370, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.307 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் பெயரில் இருந்து செயலாக்கம் வரை பல மாற்றங்களை அமல்படுத்தும் வகையில் ஒரு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு ‘விக்சித் பாரத் ரோஜ்கர் அஜீவிகா மிஷன்’ (கிராமின்), அதாவது வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதி அளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இது சுருக்கமாக ‘வி.பி.-ஜி ராம் ஜி’ திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தில் சில பலன்களும் இருக்கிறது. வேலை வழங்கும் நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விவசாய பணிகள் பாதிக்காத வகையில் விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் 60 நாட்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. 100 நாட்கள் வேலைக்கு போய்விடுவதால், விவசாய வேலைக்கு கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லையே என்று பரிதவித்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. மற்றொரு அம்சம் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வேண்டும் என்று விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும்.

இல்லையென்றால் மாநில அரசு உதவித்தொகை அளிக்கவேண்டும். இதுவரை இந்த திட்டத்துக்காக மத்திய அரசாங்கமே முழு தொகையையும் வழங்கிய நிலையில், மத்திய அரசாங்கம் 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் செலவழிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவது மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். கடந்த ஆண்டில் இந்த திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு ரூ.10,744 கோடி வழங்கிய நிலையில் இனி தமிழக அரசு அதில் ரூ.4,300 கோடியை ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது எல்லாவற்றையும்விட, கிராம ராஜ்யமே ராமராஜ்யம் என்று சொல்லி வாழ்ந்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயரை இந்த திட்டத்தில் இருந்து நீக்குவது எந்தவகையில் நியாயம்? என்ற குரலும் எழுவதை மறுக்கமுடியாது. மொத்தத்தில் பல பாராட்டுகளுக்கு உரியதாக இருக்கும் இந்த மாற்றத்தில் 2 குறைகள் இருப்பதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.