கோஹினூர் வைரத்தை விட இவர் அதிக மதிப்புமிக்கவர் - இந்திய வீரரை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2024-07-03 13:00 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது. லீக், சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் சரியாக செயல்படாத விராட் கோலி இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

இதையடுத்து விராட் கோலி இந்தியாவின் கோஹினூர் வைரத்தை போன்ற மதிப்புடைய வீரர் என்று இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் கோஹினூர் வைரத்தை விட இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக மதிப்புமிக்கவர் என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இறுதிப் போட்டியின் வர்ணனையில் இருந்த போது அவரை நான் கோகினூர் வைரத்தை விட விலைமதிப்பு மிக்கவர் என்று சொல்லியிருந்தேன். உண்மையில் உலக கிரிக்கெட்டில் அவர் தற்போது அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்த கூடிய பந்து வீச்சாளராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் அவர் அழுத்தமான சூழ்நிலையில் வந்து அசத்தலாக செயல்படுகிறார்.

அதை இங்கே பலரும் செய்வதில்லை. எந்த ஒரு போட்டியிலும், எந்த நேரத்திலும் வெற்றி பெற விரும்பும் கேப்டன் அவரை பயன்படுத்த விரும்புவார்கள். அதுவே அவருடைய ஸ்பெஷலாகும். புத்திசாலித்தனம், அற்புதம் ஆகியவை அவருக்கு பொருந்தக்கூடிய வார்த்தைகளாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்