பிரிட்ஸ்-மரிசான் கேப் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்கா 189 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரிட்ஸ் 81 ரன், மரிசான் கேப் 57 ரன் எடுத்தனர்.

Update: 2024-07-05 15:13 GMT

Image Courtesy: @ProteasWomenCSA

சென்னை,

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், சென்னையில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் லாரா வோல்வார்ட் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து டாஸ்மின் பிரிட்ஸ் உடன் மரிசான் கேப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய மரிசான் கேப் 33 பந்தில் 57 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து சோலி ட்ரையான் களம் இறங்கினார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரிட்ஸ் 81 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்