பேரனின் மனைவி பிரிந்து சென்றதால் தாத்தா எடுத்த விபரீத முடிவு

தாராபுரத்தில் பேரனின் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தாத்தா தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-30 05:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள செலாம்பாளையம் அடுத்துள்ள மண்டல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 75). இவருக்கு ஈஸ்வரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவரது மகன் மகேஷ் அரவிந்த் (30). இவர் செலாம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.

மகேஷ் அரவிந்துக்கும் கரூர் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணுக்கும் கொங்கூர் பகுதியில் உள்ள கோவிலில் கடந்த 21-ந்தேதி காதல் திருமணம் நடைபெற்றது. மகேஷ் அரவிந்த்-சத்யா இருவரும் மகேஷ் அரவிந்தின் சொந்த ஊரான செலாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் மீண்டும் வீட்டிற்கு வராததால் மகேஷ் அரவிந்த் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சத்யா ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பேரனின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே? என்று மன வேதனையில் இருந்து வந்த கருப்புசாமி தனது தோட்டத்தில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பு சாமியின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரனின் மனைவி பிரிந்து சென்றதால் தாத்தா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்