' சார்ஜ் ' செய்யும்போது, செல்போன்களை பயன்படுத்தக் கூடாது - மின் ஆய்வுத்துறை அறிவுரை

'சார்ஜ்' செய்யும்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு மின் ஆய்வுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

Update: 2024-07-02 03:27 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி (இன்று) வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், பள்ளியில் இருந்து பாதுகாப்பு தொடங்குகிறது' என்பதாகும். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:-

இந்த ஆண்டு தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது. சுவிட்சை ஆப் செய்த பிறகே பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும். மின்கம்பங்கள் மீதோ, அதன் அருகேயுள்ள மரங்களின் மீதோ ஏறவேண்டாம். எச்சரிக்கை பலகைகள் இருக்கும் இடங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கம்பி வேலிகள், மின் பெட்டிகளை தொடக்கூடாது.

மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஒரே சாக்கெட்டில் அதிக சாதனங்களை சொருகுவதின் மூலமாக மின்சுமை ஏற்றுவதை தவிர்க்கவும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் வேலைசெய்யும் கிரேன்கள் மற்றும் மொபைல் பிளான்ட்களில் இருந்து விலகி இருக்கவேண்டும்.

எலக்ட்ரிக்கல் சாக்கெட்டுகளில் விரல்களையோ, கம்பி, குச்சி போன்ற பொருள்களையோ சொருகவேண்டாம். சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின்கம்பி பாதைகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்