உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.1 லட்சம் திருடிய பெண் ஊழியர்கள்... திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.

Update: 2024-07-02 03:09 GMT

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். பின்னர் தங்களது நேர்த்தி கடனாக பக்தர்கள் மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அருணாச்சலம், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கோவில் பெண் ஊழியர்கள் 2 பேர் பணத்தை திருடுவது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இது குறித்து முருகன் கோவில் நிர்வாகம் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட 2 பெண் ஊழியர்களை தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 790-ஐ பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆர்.கே.பேட்டை தாலுகா வீரமங்கலம் பகுதியை சேர்ந்த தேன்மொழி (வயது 35), நாகபூண்டி கிராமத்தை சேர்ந்த வைஜெயந்தி (44) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் 2 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்