மனசாட்சியே நம் உண்மையான முகம்..!


Conscience article in tamil
x

நம் வாழ்வில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டுமானால், நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும்.

"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள்..மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா...?" ... இதைப்போன்ற வாசகங்களை மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதை காண்கிறோம். மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது என சிலர் அதிருப்தியில் பேசுவதையும் கேட்கிறோம். அதென்ன மனசாட்சி..?

"அது சரியில்லை என்று என் மனதிற்கு தெரியும், அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கின்றது" என்று நீங்கள் எப்போதாவது கூறி இருக்கிறீர்களா...? அப்படிச் சொல்லி இருந்தால் அதுதான் உங்கள் மனசாட்சியின் "குரல்;"

இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கின்ற அல்லது உங்களை குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வு உள்ளுக்குள் இருக்கும்.

ஆம், மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம் வாழ்வில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டுமானால், நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவிசாய்க்க வேண்டும்.

நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம். அந்த எச்சரிக்கையை மீறினால், ஏற்படக்கூடிய கெட்ட விளைவுகளை எண்ணி வருந்த நேரிடும்.

உள்மனம் கூறும் எச்சரிக்கைக்கு செவிசாய்ப்பதன்மூலம், தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்க்க முடியும். இது மட்டும்அல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது.

அமெரிக்காவின் ஜனதிபதியாவதற்கு முன்பு ஆபிராகம் லிங்கன் வழக்கறிஞராக இருந்தார். அவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதற்குக் காரணமே அவரது நேர்மைதான். உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இதற்கு அவரிடம் காரணம் கேட்டதற்கு!, "உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்" என்றார்...

ஆம், மனசாட்சி - நம் உண்மையான முகம்...! நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய உதவும்...!


Next Story