தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்.
21-ந் தேதி 2025-26-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2024-25-ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கையும் அவையில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பொது விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார்கள்.அடுத்த 2 நாட்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்கள் என்பதால் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் ஆரம்பமாகிறது.
கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுகிறார். நிறைவாக, தனது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.