அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்களை தவிர்ப்பது ஏன்?


அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்களை தவிர்ப்பது ஏன்?
x

தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு அஷ்டமி திதி உகந்த நாளாகும்.

அஷ்டமி திதி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி திதி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நல்ல காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நல்ல காரியங்கள் செய்யப்படுவதில்லை. இந்த மூன்று தினங்களிலும் தொடங்கும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே போகும் என்று சொல்கிறார்கள். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

அஷ்டமி : கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்தே. அவர் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார். இறுதியில் வெற்றி பெற்றார். எனவேதான் அஷ்டமி திதிகளில் சுபகாரியங்களான திருமணம், வீடு குடி புகுதல், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆனால் தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு உகந்த நாளாகும். குறிப்பாக செங்கல் சூளைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவை ஆகும்.

நவமி: அமாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். இந்த திதியில் தான் ராமபிரான் அவதரித்தார். அவர் அரியணை ஏற்க இருந்த நேரத்தில், காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் சொல்லில் அடங்காதவை. இதன் காரணமாகவும் நவமி திதியை பலரும் நல்ல காரியங்கள் செய்ய தவிர்க்கிறார்கள். ஆனால் இந்த திதியும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

கரிநாள்: பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் தொடங்கினால், அது விருத்தியைத் தராது என்பார்கள். இனி தொடரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை இந்த கரிநாளில் செய்யலாம். குறிப்பாக கடனை திரும்பி செலுத்துதல், அன்றைய தினம் கடனை அடைத்தால், மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது.


Next Story