தோப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா- பக்தி பரவசத்துடன் தீ மிதித்த பக்தர்கள்

சித்திரை திருவிழாவில் இன்று முத்து மாரியம்மனுக்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள தோப்பூர் சுக்காம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு 12-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூக்குழி பூஜை மற்றும் சிறப்பு தீர்த்த அபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் மாலை அணிந்து கங்கணம் கட்டி விரதம் இருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் ஊஞ்சலூர் காவேரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து கரகம் பாலித்து, பூக்குழி வளர்க்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இன்று காலை கோவில் முன்பாக 15 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட பூக்குழியில், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இறங்கி பக்தி பரவசத்துடன் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து புனித தீர்த்தங்களை கொண்டு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.