பங்குனி உத்திர திருவிழா: சென்னிமலை முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்

வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
ஈரோடு,
சென்னிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக தேரை இழுத்து குமரன் சதுக்கத்தில் நிறுத்துகிறார்கள். மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பில் மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 13-ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ர.பழனிவேல், கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், வே.செ.பாலசுப்பிரமணியம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.