பூதத்தாழ்வார் உற்சவம்: மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் தேரோட்டம்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில், 63வது திவ்ய தேசமாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் பூதத்தாழ்வார் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் உற்சவம் கடந்த 22-ம் தேதி துவங்கியது. பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது. விழா நாட்களில் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
24-ம் தேதி சூரிய பிரபை வாகனத்திலும், 26-ம் தேதி சந்திர பிரபை வாகனத்திலும், 29ம் தேதி யானை வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று திருத்தேர் வீதி உலா (தேரோட்டம்) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து பூதத்தாழ்வார் மண்டபத்தில் சிறப்பு பூஜையும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.






