கோப்பை வீட்டுக்கு வருகிறது...கொண்டாடத் தயாராக இருங்கள் - ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த ரோகித்

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2024-07-03 14:32 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பார்படாஸில் சிக்கி தவித்தனர். இந்நிலையில் பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா புறப்பட்டது. அவர்கள் நாளை காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பையுடன் நாளை தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூழ திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்றும், தொடர்ந்து மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ரோகித் சர்மா இது பற்றி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, இந்த ஸ்பெஷல் தருணத்தை உங்களுடன் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம். எனவே அனைவரும் இந்த வெற்றியை ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணிக்கு கடற்கரை சாலை மற்றும் வான்கடே மைதானத்தில் கொண்டாடத் தயாராக இருங்கள். கோப்பை வீட்டுக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்