ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவு... திருவண்ணாமலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-08-08 06:55 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் விநாயகர், பராசக்தி அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஆடிப்பூர விழா நிறைவையொட்டி நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்தார். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடந்தது. பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்