தமிழ்நாடு அரசின் 'கலைச்செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் 'கலைச்செம்மல்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-18 15:03 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1,00,000/- வீதம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு 50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கலைச் செம்மல் விருதிற்கு படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் படைப்பாளர் நவீனபாணி அல்லது மரபுவழி பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பிக்கும்/பரிந்துரை செய்யப்படும் படைப்பாளிகளின் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க 20 கலைப் படைப்புகளின் வண்ண ஒளிப்படங்கள் (A4 Size – Colour Photo) இணைத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பிக்கும்/பரிந்துரைக்கப்படும் படைப்பாளர் குறித்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக் குறிப்புகள், கலை சார்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் இணைத்து அனுப்பி வைத்தல் வேண்டும் என்றும் மாநில அளவில்/தேசிய அளவில்/உலக அளவில்/தனியார் அமைப்புகள் நடத்திய கலைக்காட்சிகளில் படைப்பாளர்களின் கலை படைப்புகள் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு விண்ணப்பிக்கும்/பரிந்துரைக்கப்படும் படைப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய முழு தன்விவரக்குறிப்பு (Profile) இடம் பெறுதல் வேண்டும் எனவும், விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், 2ஆம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 (தொலைபேசி:044-28193157, 28193195) என்ற முகவரிக்கு வரும் 01.07.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்