4 கட்சி மாறியவருக்கு காங்கிரஸ் வரலாறு தெரியாது - செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை கடும் தாக்கு

கர்மவீரர் காமராஜர், தனது வாழ்வின் இறுதிவரை, இந்திரா காந்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-06-26 12:42 GMT

சென்னை,

நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜிவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை  அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார்.

எந்த நிலையிலும் எவருக்கும் அஞ்சாமல் விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி இருந்தார்.

இந்தநிலையில், தன்னை விமர்சனம் செய்த செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெருக்கடி நிலையை அறிவிக்கும் முன்னரே, நமது நாட்டை நெருக்கடி நிலையில்தான் இந்திரா காந்தி அவர்கள் வைத்திருந்தார் என்பதும், அதனால்தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே அவரைக் கடுமையாக எதிர்த்தனர் என்பதும், நெருக்கடி நிலை அறிவிக்கும் முன்னர் நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதலபாதாளத்தில் கிடந்ததும் அண்ணன் திரு. செல்வபெருந்தகை அவர்களுக்குத் தெரியுமா? நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்த பல மாநில அரசுகளைக் கலைத்ததும், அதில் இன்றைய காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுக அரசும் ஒன்று என்பதையும் அண்ணன் மறந்துவிட்டார் என்று எண்ணுகிறேன். இத்தனைக்கும், நெருக்கடி நிலை அறிவிப்பையும், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகள் நியமனத்தில், நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்ற அரசியல் சாசனத்தில் 39 ஆவது பிரிவு திருத்தத்தை மனமுவந்து ஆதரித்த கட்சி திமுக. இன்று நீங்கள் இருவரும் அதனை மறக்கவோ, மறைக்கவோ முயற்சிக்கலாம். ஆனால், வரலாறு மாறாது என்பதை அண்ணனுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவரது மகன் சஞ்சய் காந்தி தலையீட்டை இல்லை என்று சொல்கிறாரா அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை? சஞ்சய் காந்தியின் கார் நிறுவனத்துக்குக் கடன் வழங்குவதற்காகவே, ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை மாற்ற வசதியாக, தனக்கு வேண்டப்பட்டவரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்த வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு, ஊழலும், அரசியல் அத்துமீறலும், ஜனநாயக விரோதமும் தவிர வேறு என்ன பெரிய பெருமை இருந்து விடப் போகிறது?

இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்பது குறித்த விசாரணை, நான்கு நாட்களில் நீதிமன்றத்தில் வரவிருக்கிறது என்பது தெரிந்ததும், அரசியல் சாசனத்தையே திருத்திய காங்கிரஸ் கட்சியும், அதன் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணி கட்சிகளும், இன்று அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவோம் என்று கூறித் திரிவதை விட நகைமுரண் வேறு இருக்க முடியுமா?

விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டு காலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை, பாஜகவும் அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை. இந்திரா காந்தி அவர்களின் பெருமையைப் பற்றிப் பேசக் கூட, நேருவின் மகள் என்று தான் தொடங்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன பெருமை இருக்கிறது என்பதை அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் தான் கூற வேண்டும். வாரிசு என்பதால் மட்டுமே தலைமைப் பதவிக்கு வரும் நேரு குடும்பத்தினரை விட, 4 கட்சிகளில் மாறி மாறிப் பயணம் செய்திருந்தாலும், தனது கடின உழைப்பால், ஒவ்வொரு கட்சியிலும் சிறப்பாகப் பணியாற்றி, இன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்திருக்கும் அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள்தான் பெருமைக்குரியவராகத் தெரிகிறார். எனக்குப் பாதியில் வந்ததால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு குறித்து அண்ணன் திரு செல்வப்பெருந்தகை அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திரா காந்தி அவர்களைப் பிரதமர் பொறுப்பில் அமர வைத்தது. இன்று அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் அமர்ந்திருக்கும் சத்தியமூர்த்தி பவனை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான் என்பதும், பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தி அவர்களின் நடவடிக்கைகள் பிடிக்காமல், கட்சியிலிருந்து நீக்கியதும் அவரேதான் என்பதையும் அண்ணனுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கர்மவீரர் காமராஜர், தனது வாழ்வின் இறுதிவரை, இந்திரா காந்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும், அண்ணன் கூறிய இந்திரா காந்தியின் பெருமைகள் வரிசையில் வருமா என்பதை, அண்ணன்தான் விளக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கு விரோதமாக நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தி, பொதுமக்கள் கோபத்துக்கு ஆளாகி, அதன் பின்னர் வந்த தேர்தலில் தோற்றுப் போன இந்திரா காந்தி, எந்த நாட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றினார் என்று அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை பெருமைப்படுகிறார் என்பது தெரியவில்லை.

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில், தொடர்ந்து மூன்று தேர்தல்களாக இரட்டை இலக்கத்தைத் தாண்டாத ஒரு கட்சியின் தலைவருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு. இதனையும் ராகுல் காந்தியின் சாதனையாகப் பேசுவது, அண்ணன் திரு. செல்வப்பெருந்தகை அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. நேரு மட்டுமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு எழுதி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன என்பது எப்படித் தெரியும்? ஆர்.எஸ்.எஸ்ஸை விடுங்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேறு எந்தத் தலைவர்களின் வரலாறாவது உங்களுக்குத் தெரியுமா?  குடும்பங்கள் எங்கே தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு தன் குடும்பத்தாருடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை. உங்கள் வசதிக்கு அரசியல் சாசனத்தை மாற்றியிருக்கலாம், வரலாற்றை மாற்றமுடியாது என்பதை திரு செல்வப்பெருந்தகை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்