பட்டாசுக்கு தடை கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு..!

பட்டாசுக்கு தடை கோரிய மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

Update: 2023-09-22 02:54 GMT

புதுடெல்லி,

பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது. தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யக்கோரியும் அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்தார். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இடையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந்தேதி தள்ளிவைத்தது. இந்த நிலையில் இந்த வழக்குகளில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்