உ.பி.யில் சிறுமியை கடத்தி காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சிறுமியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-09-20 14:18 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், நேற்று காலை தனது வீட்டின் அருகே இருக்கும் கடைக்கு உணவு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நீரஜ் என்ற நபர், சிறுமியிடம் தண்ணீர் பாட்டில் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நீரஜ்ஜின் நண்பர் சைலேந்திரா மற்றும் மற்றொரு நபர் ஆகிய மூவரும் இணைந்து, மயக்கமடைந்த சிறுமியை காரில் கடத்திச் சென்று, காரிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அந்த சிறுமியை பர்சானா பகுதி அருகே சாலையோரம் வீசிவிட்டு மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து கண்விழித்த சிறுமி, வீடு திரும்பி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 3 குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறுமியின் உடல்நலம் சீரடைந்த பின்னர் அவரிடம் விரிவான வாக்குமூலம் பெறப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்