சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-06-09 21:35 GMT

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் பிரமுகர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி, அதில் முறைகேடு செய்ததாக போலீஸ்காரர்களான ஹரீஷ், மோகன்குமார், என்ஜினீயர் திலீப்குமார் ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருந்தார்கள். அவா்களை சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தார்கள். கைதான 3 பேரையும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுமுறைகேடு குறித்து 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் அனுமதி கேட்டனர்.

இதையடுத்து ஹரீஷ், மோகன்குமார், திலீப்குமாரை சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உள்ளாா். அதைத்தொடர்ந்து, 3 பேரிடமும் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் வினாத்தாளில் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த முறைகேட்டிற்கு 3 பேருக்கும் உதவி செய்தது யார்?, எத்தனை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள்?, முறைகேட்டில் எப்படி ஈடுபட்டனர் என்பது குறித்து 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்