குஜராத் கலவர வழக்கு: தீஸ்தாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது

குஜராத் கலவர வழக்கில் தீஸ்தாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Update: 2023-07-19 18:43 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது மாநில முதல்-மந்திரியாக இருந்த, பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட்டை ஆமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களை கைது செய்ய போலியான ஆவணங்களை தயாரித்ததாக கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.

தீஸ்தா செடல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீஸ்தா செடல்வாட் தனக்கு ஜாமீன் வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதனை தொடர்ந்து தீஸ்தா செடல்வாட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர், அவர் குஜராத் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் சில மாதங்களாக தீஸ்தா செடல்வாட்டின் ஜாமீனை ஐகோர்ட்டு நீடித்து வந்தது. இதனையடுத்து தீஸ்தா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை குஜராத் கோர்ட் தள்ளுபடி செய்ததோடு, அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குஜராத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி சுப்ரீம்கோர்ட்டை அவர் நாடினார். நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போப்பண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய சுப்ரீம்கோர்ட் அமர்வு, குஜராத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை வழங்கியது. வழக்கின் விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்தது.

அதன்படி அந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, குஜராத் ஐகோட்டின் உத்தரவை ரத்து செய்ததது.

மேலும் சுப்ரீம்கோர்ட்டு தனது ஜாமீன் உத்தரவில், தீஸ்தாவின் பாஸ்போர்ட் விசாரணை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட வேண்டும். அவர் சாட்சிகளின் மீது எந்தவித ஆளுமையும் செலுத்த முயல கூடாது. குஜராத்தில் இருக்கும் பெரும்பாலன சாட்சிகளிடமிருந்து அவர் விலகியே இருக்க வேண்டும். இவற்றில், எதையாவது தீஸ்தா மீறினார் என்றால், அவரது ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய சுப்ரீம்கோர்டை குஜராத் போலீசார் நாடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்