தேடுதல் பணிகளுக்கு இடையூறு: அசாம் ரைபிள் படை மீது மணிப்பூர் போலீசார் வழக்கு

கடந்த வாரத்திலும் மீண்டும் வன்முறை தாக்குதல் நடந்தது.

Update: 2023-08-08 22:45 GMT

இம்பால், 

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கடந்த வாரத்திலும் மீண்டும் வன்முறை தாக்குதல் நடந்தது. இதையடுத்து வன்முறையாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மணிப்பூர் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அங்கு பாதுகாப்புக்காக அசாம் ரைபிள் படை உள்ளிட்ட துணை ராணுவ போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி போலீசார், வன்முறையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை தேடி சென்று கொண்டிருந்தனர். அவர்களை பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள குவாக்டா-கோதோல் சாலையில், பாதுகாப்புக்கு நின்ற அசாம் ரைபிள் படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை தொடர்ந்து செல்லவிடாமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார், அசாம் ரைபிள் படையினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். இதற்கு அசாம் ரைபிள் பிரிவினர் அளித்துள்ள விளக்கத்தில், 'குக்கி மற்றும் மெய்தி பகுதிகளுக்கு இடையே உள்ள இடையக மண்டலங்களில் அமைதி தன்மையை உறுதிப்படுத்தும் கட்டளை தலைமையகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாங்கள் பணி செய்து வருகிறோம்' என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்