இலங்கையை சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி: சென்னை வாலிபர் உள்பட மேலும் 2 பேர் கைது

இலங்கையை சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-25 18:45 GMT

பெங்களூரு :-

பெங்களூருவில் இலங்கையை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த நிலையில் எலகங்கா அருகே ஜக்கூர் லே-அவுட் பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த காசின்குமார், அமில் நுகான், ரங்க பிரசாத் என்பது தெரியவந்தது. இலங்கையில் நடந்த கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளான இவர்கள், பெங்களூருவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கியதாக மன்சூர் (வயது 30) மற்றும் அன்பு ஆகிய 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் மன்சூர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், அன்பு என்பவர் பெங்களூரு விவேக் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்