சிறையில் தள்ளினாலும் டெல்லியில் ஆம் ஆத்மிக்கே வெற்றி: கெஜ்ரிவால் பேச்சு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க முடியாது என பா.ஜ.க.வுக்கு தெரியும் என்று கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

Update: 2023-11-18 15:02 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களுக்கான கூட்டத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, நான் கைது செய்யப்பட்டாலும் கூட, 2024 மக்களவை தேர்தலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெறும். சிறைக்கு செல்வதில் எனக்கு பயமில்லை என கூறினார்.

ஒரு புரட்சிக்காரருக்கு, சிறை என்பது ஒரு அலங்காரம். 15 நாட்கள் நான் சிறையில் தங்கியிருக்கிறேன். அது என்னை ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் அதிகாரத்திற்கு பேராசைப்படுபவர்கள் அல்ல. யாரும் கேட்டு கொள்ளாமலேயே, 49 நாட்களில் ராஜினாமா செய்த உலகின் முதல்-மந்திரி நானாகவே இருப்பேன் என்றும் அவர் பேசினார்.

தொடர்ந்து அவர், நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல இருக்கிறோம். டெல்லி மக்களை சந்தித்து, அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என கேட்போம். சிறையில் இருக்கும் சூழல் வருமென்றால், அப்போதும் கூட, முதல்-மந்திரியாக நான் தொடர வேண்டுமா? அல்லது பதவி விலக வேண்டுமா? என அவர்களிடம் நாங்கள் கேட்போம்.

இதுவே எங்களுடைய தேர்தல் பிரசாரத்தின் தொடக்க விசயம் ஆகவும் இருக்கும். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க முடியாது என பா.ஜ.க.வுக்கு தெரியும். அதனாலேயே, எங்கள் கட்சியின் தலைவர்களை சிறையில் தள்ள அவர்கள் திட்டங்களை தீட்டி வருகின்றனர் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்