வீடு புகுந்து ரூ.16 லட்சம் நகை, பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோலார் தங்கவயலில் வீடு புகுந்து ரூ.16 லட்சம் தங்கநகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-05-22 22:29 GMT

கோலார் தங்கவயல்: கோலார் தங்கவயலில் வீடு புகுந்து ரூ.16 லட்சம் தங்கநகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ரூ.16 லட்சம் நகை, பணம் திருட்டு

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா ராபர்ட்சன்பேட்டையில் விவேக் நகரில் வசித்து வருபவர் விநாயகம். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் தமிழ்நாடு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள், விநாயகம் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை விநாயகத்தின் சகோதரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்து அதில் இருந்த நகை, பணம் திருட்டு போய் இருந்தது. அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அதாவது பீரோவில் இருந்து 326 கிராம் தங்கநகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

வலைவீச்சு

இதுபற்றி அவர், ராபர்ட்சன் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். அப்போது நாய் மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராபர்ட்சன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்