உயிர் காக்கும் தாய்ப்பால்!


உயிர் காக்கும் தாய்ப்பால்!
x

தாய் தன்னுடைய உதிரத்தை கொடுத்து குழந்தைகளை உருவாக்கும் உன்னத உயிர்.

சென்னை,

தாய் என்பது ஒரு சொல் கவிதை. ஈரெழுத்து காவியம். தாய் தன்னுடைய உதிரத்தை கொடுத்து குழந்தைகளை உருவாக்கும் உன்னத உயிர். தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை தொடக்கத்திலேயே தீர்மானிப்பது தாய்ப்பால்தான். குழந்தைக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தாய்ப்பாலிலேயே கிடைத்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பதால் குழந்தையை எந்த நோய் நொடியும் தாக்காமல் பாதுகாக்கிறது. உலகிலேயே எந்த அறிவியலாலும் உருவாக்க முடியாதது ரத்தமும், தாய்ப்பாலும்தான். இவை இரண்டும் இயற்கை தந்த அருட்கொடையாகும்.

இரண்டுமே தானாக சுரக்கக்கூடியதாகும். அதிலும் தாய்ப்பால் பெண்மைக்கே குறிப்பாக தாய்மைக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதமாகும். பிரசவத்துக்கு பிறகு சில காலங்கள் மட்டும் பெண்களுக்கு சுரப்பதாகும். இந்த வாய்ப்பு எல்லா பெண்களுக்கும் தாராளமாக கிடைப்பதில்லை. சிலருக்கு தேவைக்கு ஏற்பவும், சிலருக்கு தேவைக்கு மிக அதிகமாகவும், சிலருக்கு தேவைக்கு சுரக்காமலும் இருக்கிறது. சில குழந்தைகளுக்கு தாய் இல்லாத நிலை பல காரணங்களால் ஏற்படுகிறது.

சில பெண்களுக்கு குழந்தை இறந்துவிடும் நிலையில், பாலூட்ட முடியாத துர்பாக்கியம் ஏற்படுகிறது. அதே நேரத்தில், தாய் இறந்தநிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காத நிலை உள்ளது. தாயிடம் பால் இல்லையென்றாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியமானது. இத்தகைய சூழ்நிலையில் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் பெண்கள் தங்கள் தேவைக்குபோக மீதம் உள்ள பாலை தானமாக கொடுக்கும்வகையில் தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இப்போது அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்பட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன. இங்கிருந்து தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்கிறார்கள்.

கருணை உள்ளம் கொண்ட மனித வடிவில் நடமாடும் தெய்வங்களாக விளங்கும் பல பெண்கள் தன் குழந்தையைப்போன்று பிற குழந்தைகளையும் நேசிக்கும் தாய்மார்கள், தன் குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெண்கள் தாய்ப்பால் தானமாக கொடுக்கிறார்கள். இதுஒருபுறம் இருக்க இப்போது தாய்ப்பால் விற்பனைக்கும் வந்துவிட்டது. சில பெண்கள் குறிப்பாக ஏழை பெண்களிடம் இருந்து தாய்ப்பாலை வாங்கி அதை பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து 100 மில்லி லிட்டரை ரூ.500-க்கு விற்பனை செய்ததாக சென்னையில் 2 மருந்துகடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு விற்பனையகத்தில் கர்நாடகாவில் இருந்து தாய்ப்பாலை பெற்று பவுடராக்கி விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல இடங்களில் இப்போது தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விற்பனையை உணவு பாதுகாப்புத்துறை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்துவருகிறது. தாய்ப்பால் குறித்து இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காததால் தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கும், தாய் இல்லாத குழந்தைகளுக்கும் கொடுப்பதற்காக இவ்வாறு கடைகளிலும், மருத்துவமனைகளிலும் விலைக்கு கொடுக்கும் தாய்ப்பால் பெரிதும் கைகொடுக்கிறது. தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தாய்ப்பால் வங்கிகளில் தானமாக கொடுக்கும் தாய்ப்பாலால் மட்டும் இந்த தேவையை பூர்த்தி செய்துவிடமுடியாது. அதிகம் சுரக்கும் ஏழை தாய்மார்கள் தாய்ப்பாலை கொடுப்பதற்காக அவர்களுக்கு ஒரு தொகை கொடுக்கப்படுகிறது. அதேபோல தேவைப்படும் குழந்தைகளுக்கும் சத்தான தாய்ப்பால் கிடைக்கிறது. இப்போது தாய்ப்பால் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தாய்ப்பால் விற்பனையை நடவடிக்கைக்கு உட்படுத்தாமல் முறைப்படுத்தி சட்டபூர்வமாக்குவதே சால சிறந்ததாகும்.


Next Story