சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை
x
தினத்தந்தி 2 Sep 2024 7:37 PM GMT (Updated: 2 Sep 2024 7:38 PM GMT)

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால், பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அவ்வப்போது வெயில், கருமேகம் சூழ்ந்து மழைக்கான ரம்மியமான சூழல், லேசான மழை என பருவநிலை மாறி, மாறி நிலவிவருகிறது. அதே சமயத்தில் நெல்லை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, கோவை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் லேசான மழை பதிவாகியது.

இந்த நிலையில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 5 நாட்கள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை நகரில் எழும்பூர், சென்ட்ரல், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

இது தவிர, முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி என சென்னை- திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும், புறநகர் பகுதிகளான அடையார், வேளச்சேரி, கீழ்கட்டளை,தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, கோவிலம்பாக்கம், திருவான்மியூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.


Next Story