வீட்டில் புகுந்து மரத்தில் ஏறிய கரடி... பொதுமக்கள் அச்சம்


வீட்டில் புகுந்து மரத்தில் ஏறிய கரடி... பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 25 July 2024 12:42 AM GMT (Updated: 25 July 2024 5:29 AM GMT)

கரடி பல மணி நேரத்திற்கு மேலாக கீழே இறங்காததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள சுற்று வட்டார கிராமங்களுக்குள் சிறுத்தை, கரடி, மான், மிளா காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீரை தேடி அவ்வப்போது வருவது தொடர் கதையாகி வருகிறது.

நேற்று அதிகாலை மணிமுத்தாறு மெயின் ரோட்டில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் சாலையை கடந்து சென்ற கரடி அங்குள்ள தமிழ்நாடு 9-ம் அணி பட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து ஒரு மரத்தின் மீது ஏறியது. நீண்ட நேரமாகியும் மரத்தை விட்டு இறங்காததால், இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அம்பை வனச்சரகர் நித்யா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரடியை காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் மரத்தை விட்டு கரடி இறங்காமல் அட்டகாசம் செய்து வருவதால் வனத்துறை காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இரவு வரை மரத்தின் மீது ஏறிய கரடி பல மணி நேரத்திற்கு மேலாக கீழே இறங்காததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.


Next Story