உலகக் கோப்பையை வென்றபோது பெற்ற சிறப்பு உணர்வை மீண்டும் பெற விரும்புகிறோம் - நிக்கோலஸ் பூரன்


உலகக் கோப்பையை வென்றபோது பெற்ற சிறப்பு உணர்வை மீண்டும் பெற விரும்புகிறோம் - நிக்கோலஸ் பூரன்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 1 Jun 2024 11:43 AM GMT (Updated: 1 Jun 2024 2:31 PM GMT)

2 டி20 உலகக் கோப்பைகளை வென்ற பொழுது பெற்ற சிறப்பு உணர்வை மீண்டும் பெற விரும்புகிறோம் என நிக்கோலஸ் பூரன் கூறியுள்ளார்.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற இருப்பது குறித்தும், கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாத்து குறித்தும் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நாங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத பொழுது அணியில் இருந்த எல்லோரும் பெரிய மனக்காயமடைந்தார்கள். நான் கேப்டன் பகுதியில் இருந்து ராஜினாமா செய்தேன். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களுக்கு என்ன ஆபத்து இருக்கிறது என்பது நன்றாக தெரியும்.

எங்களை வெளிப்படையாக மீட்டுக் கொள்ளவும், கரீபியனிலும் மற்றும் வெளியிலும் இருக்கும் எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்தவும், எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்கிறோம். உலகெங்கும் நடக்கும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் எங்களுடைய வீரர்கள், தொழில் முறை வீரர்கள் ஆக என்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய தொடரில் பெரிய வீரர்கள் சிலர் இல்லை. ஆனால் அந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். எங்களுடைய வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அதுதான் எங்களுக்கு தேவையானது.

நாங்கள் வெற்றி பெறலாம் இல்லை வெற்றி பெறாமலும் போகலாம். ஆனால் ஒரு மூத்த வீரராக களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் 100 சதவீதம் கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்து மீண்டும் உலகக்கோப்பை விளையாடுகிறோம். நாங்கள் இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றபோது பெற்ற சிறப்பு உணர்வை மீண்டும் பெற விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story