விராட் அதிருப்தி தெரிவித்த விதிமுறை: பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை... செயலாளர் அதிரடி


விராட் அதிருப்தி தெரிவித்த விதிமுறை: பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை... செயலாளர் அதிரடி
x
தினத்தந்தி 20 March 2025 2:29 AM (Updated: 20 March 2025 2:32 AM)
t-max-icont-min-icon

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

மும்பை,

அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் எதிரொலியாக பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அதில் முக்கிய ஒன்றாக, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கியிருக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாட்களும், அதற்கு குறைவானது என்றால் ஒரு வாரமும் வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கலாம் என்ற விதிமுறை பல முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விதிமுறை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய முன்னணி வீரரான விராட் கோலி நேரடியாக அதிருப்தி தெரிவித்ததுடன் சில கருத்துகளையும் கூறியிருந்தார். இதனால் பி.சி.சி.ஐ. இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த கட்டத்தில் தற்போதைய கொள்கை அப்படியே இருக்கும். ஏனெனில் இது தேசத்திற்கும் எங்களுக்கும் (பி.சி.சி.ஐ.) மிக முக்கியமானது. ஒரு ஜனநாயக அமைப்பில், மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. இதில் சில மனக்கசப்பு அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் என்பதை பி.சி.சி.ஐ. அங்கீகரிக்கிறது. இந்தக் கொள்கை அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும், வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், துணைப்பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை ஒரே இரவில் உருவாக்கப்படவில்லை. இது பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. இது நமது தலைவர் ரோஜர் பின்னி விளையாடிய காலத்திலிருந்தே இருக்கிறது. சிறப்பு சூழ்நிலைகளில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான ஏற்பாடுகளுடன், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கும் காலத்தை பி.சி.சி.ஐ. அதிகரித்துள்ளது" என்று கூறினார்.


Next Story