டி20 உலகக்கோப்பை: வீரர்களை எச்சரித்த ராகுல் டிராவிட்..காரணம் என்ன..?


டி20 உலகக்கோப்பை: வீரர்களை எச்சரித்த ராகுல் டிராவிட்..காரணம் என்ன..?
x
தினத்தந்தி 3 Jun 2024 4:38 AM GMT (Updated: 3 Jun 2024 5:52 AM GMT)

நியூயார்க் மைதானம் மெதுவாக இருப்பதால் காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த கோப்பையின் தொடரின் கணிசமான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

ஆனால் அமெரிக்காவில் போதுமான அளவு கிரிக்கெட் மைதானங்கள் இல்லை. அதனால் இந்த தொடருக்காக நியூயார்க், டல்லாஸ் போன்ற நகரங்களில் பிரத்தியேகமாக புதிய மைதானங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் மைதானம் நியூயார்க் நகரில் 3 மாதங்களில் உருவாக்கப்பட்டது.

மேலும் அங்குள்ள பிட்ச்கள் இயற்கையாக தயாரிக்கப்படாமல் தற்காலிகமாக செயற்கையாக பொருத்தப்பட்டுள்ளது. அது போக பயிற்சி எடுப்பதற்கான மைதானங்கள் மற்றும் வசதிகள் உயர்தரமாக இல்லை என்று சமீபத்தில் இந்திய அணி நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நியூயார்க் மைதானம் மெதுவாக இருப்பதால் காயத்தை சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். எனவே இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"மைதானம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. எனவே எங்கள் வீரர்கள் தொடை எலும்பு மற்றும் தசைகளில் கொஞ்சம் சிரமத்தை உணர்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு பகுதியாகும். இருப்பினும் நாங்கள் அதற்கு உட்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். வங்காளதேசத்துக்கு எதிராக நாங்கள் அந்த மைதானத்தில் சராசரிக்கும் அதிகமான ஸ்கோர் எடுத்தோம்" என்று கூறினார்.


Next Story