மழையால் மாறிய ஆட்டம்... இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா


மழையால் மாறிய ஆட்டம்... இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 30 Sep 2024 9:22 AM GMT (Updated: 30 Sep 2024 12:11 PM GMT)

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

பிரிஸ்டல்,

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்ற நிலையில் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.2 ஓவர்களில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் 107 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன மேத்யூ ஷார்ட் 30 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அதிரடியான தொடக்கம் அமைத்து கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் சுமித் - ஜோஷ் இங்லிஷ் இணை சிறப்பாக விளையாடியது.

20.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மேற்கொண்டு தொடர முடியாமல் போனது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க'டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறை கொண்டு வரப்பட்டது. அந்த சமயம் ஆஸ்திரேலியாவுக்கு 117 ரன்களே தேவையாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை டிராவிஸ் ஹெட் வென்றார்.


Next Story