2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்த சோகம்... முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்


2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்த சோகம்... முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்
x

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

ராவல்பிண்டி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் முறையே இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 68.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 344 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 77 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 2வது இன்னிங்சில் 37.2 ஓவர்களில் 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 3.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.

மேலும் இங்கிலாந்துக்கு எதிராக 2015-ம் ஆண்டுக்கு பின் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.


Next Story