ஐ.பி.எல். கோப்பை அல்ல.. என்னுடைய அடுத்த இலக்கு அதுதான் - ஹர்திக் பாண்ட்யா


ஐ.பி.எல். கோப்பை அல்ல.. என்னுடைய அடுத்த இலக்கு அதுதான் - ஹர்திக் பாண்ட்யா
x

image courtesy: PTI

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதனால் இந்திய அணியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா, தற்போது ரோகித் தலைமையில் மீண்டும் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்காக குறைந்தது 5 - 6 ஐ.சி.சி. கோப்பைகளை வெல்ல விரும்புவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக்கோப்பையை வென்றாலும் அவையெல்லாம் தமக்குப் போதாது என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் என்னுடைய வேலை குறையாக விடப்பட்டது. அன்றைய நாளில் என்னால் போட்டியை பினிஷிங் செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இன்றைய நாளில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளர் என்ற பெயருடன் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை எப்போதும் என்னால் முடிந்தளவுக்கு நிறைய சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்ல வேண்டும். 2024 டி20 உலகக் கோப்பையை வென்றபோது இத்தோடு முடியவில்லை இன்னும் 5 - 6 கோப்பைகள் எனக்கு வேண்டும் என்று சொன்னேன்.

அப்படி சொன்னதிலிருந்து மற்றுமொரு கோப்பையை தற்போது சேர்த்துள்ளது மகிழ்ச்சியை கொடுக்கிறது. கிரிக்கெட்டில் விளையாடும் என்னுடைய பயணத்தில் எனது அணி வெற்றி பெறுகிறதா? என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமான விஷயம். இந்தியாவுக்காக வரும் காலங்களில் இது போன்ற வெற்றியை நான் விரும்புகிறேன். தற்போது சாம்பியன்ஸ் டிராபி முடிந்து விட்டது. அடுத்ததாக இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை தூக்குவதே என்னுடைய அடுத்த இலக்கு" என்று கூறினார்.

இவர் எதிர் வரும் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story