மான்செஸ்டர் டெஸ்ட்: சதத்தில் சாதனை படைத்த இந்திய அணி


மான்செஸ்டர் டெஸ்ட்: சதத்தில் சாதனை படைத்த இந்திய அணி
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 28 July 2025 9:05 AM IST (Updated: 28 July 2025 10:19 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.

பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 5ம் நாள் முடிவில் 2-வது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும் (206 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் (185 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டும் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.கடைசி நாளில் இந்திய அணியை சுருட்டி வெற்றியை ருசித்துவிடலாம் என்ற இங்கிலாந்து அணியின் கனவை இந்திய பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கினர்.

இந்த ஆட்டத்தின் 3வது இன்னிங்சில் இந்தியா தரப்பில் கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் அவர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். அதாவது, இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று அல்லது நான்காவது இன்னிங்ஸில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சதமடித்திருப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த சாதனையை கில், சுந்தர், ஜடேஜா சதம் அடித்து படைத்துள்ளனர்.

1 More update

Next Story