களத்தில் மோதிய கருண் நாயர் - பும்ரா.. ரோகித் கொடுத்த ரியாக்ஷன் வைரல்

டெல்லி - மும்பை ஆட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் அடித்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 89 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் கரண் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் ரன் எடுக்க ஒடுகையில் எதிர்பாராத விதமாக பந்து வீசிய பும்ரா மீது மோதினார். இதனால் அதிருப்தி அடைந்த பும்ரா கருண் நாயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம் கருண் நாயர் விளக்கினார். இதனை கண்ட ரோகித் சர்மா, கருண் நாயரை கலாய்ப்பது போல் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.






