கம்ரான் குலாம் அபார சதம்; முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 259 ரன்கள் சேர்ப்பு


கம்ரான் குலாம் அபார சதம்; முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 259 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: AFP

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது.

முல்தான்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த ஷான் மசூத் 3 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்ந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் சதம் அடித்த நிலையில் 118 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 37 ரன்னுடனும், ஆகா சல்மான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story