நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டிய ஐ.சி.சி

Image Courtesy: @ACCMedia1
வீரர்கள் மற்றும் நடுவர்கள் சந்திப்பு பகுதியில் செல்போனுக்கு அனுமதி கிடையாது.
துபாய்,
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டை ஆசிய போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடம் பிடித்தது.
ஆனால் அவர் மீது தவறு இல்லை என கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அவரை நீக்க மறுத்தது. இதற்கிடையே இந்த பிரச்சினையை தீர்க்க, பாகிஸ்தான் அணியின் கேப்டன், பயிற்சியாளர், அணி மேலாளர், ஊடக மேலாளர் ஆகியோருடன் போட்டி நடுவர் பைகிராப்ட் சந்தித்து பேசுவதற்கு ஐ.சி.சி. ஏற்பாடு செய்திருந்தது.
பல முறை எச்சரித்தும் பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் நயீம் கிலானி அந்த சந்திப்பை வீடியோவாக எடுத்துள்ளார். வீரர்கள் மற்றும் நடுவர்கள் சந்திப்பு பகுதியில் செல்போனுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அதையும் மீறி செல்போனில் அதை படம் பிடித்து இருக்கிறார். இவ்வாறு பல்வேறு வகையில் நடத்தை விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியதாக ஐ.சி.சி. குற்றம் சாட்டியுள்ளது.






