ஆடும் லெவனில் சர்பராஸை காட்டிலும் கே.எல்.ராகுலை தேர்வு செய்வேன் - இந்திய முன்னாள் வீரர்


ஆடும் லெவனில் சர்பராஸை காட்டிலும் கே.எல்.ராகுலை தேர்வு செய்வேன் -  இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக சுப்மன் கில் இடம் பெறவில்லை. புனேவில் தொடங்கும் 2வது போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுப்மன் கில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சுப்மன் கில் 2வது போட்டியில் இடம் பெற்றால் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில், சுப்மன் கில் ஆடும் லெவனில் இடம் பெறும் பட்சத்தில், சர்பராஸ் கான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் நான் ராகுலையே ஆடும் லெவனில் தேர்வு செய்வேன் என இந்திய முன்னாள் வீரரான பார்தீவ் படேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அடுத்த டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் சுப்மன் கில் இடம் பெறும் பட்சத்தில் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுலில் யாரை வைத்து ஆடுவது என்ற கேள்வி எழுகிறது.

நான் ராகுலை வைத்து ஆடுவேன். அணி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வைத்து இதனை சொல்கிறேன். இருந்தாலும் இது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தே அமையும். பெங்களூரு போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் ராகுலை மூன்றாவது இடத்தில் ஆட வைத்திருக்கலாம். ஆனால், அணி நிர்வாகம் அதனை மாற்ற விரும்பவில்லை.

அதனால் அவர் ஆறாவது பேட்ஸ்மேனாகவே களம் கண்டார். அவர் மீது அதீத நெருக்கடி உள்ளது. இருப்பினும் அவருடனே நான் ஆட விரும்புவேன். இதே போல பந்து வீச்சில் முகமது சிராஜ் அல்லது ஆகாஷ் தீப் என யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story