என் வாழ்நாளில் இந்தியா -பாகிஸ்தான் அந்த வடிவத்தில் மோதுவதை பார்க்க... - பாக்.முன்னாள் வீரர் உருக்கம்


என் வாழ்நாளில் இந்தியா -பாகிஸ்தான் அந்த வடிவத்தில் மோதுவதை பார்க்க... - பாக்.முன்னாள் வீரர் உருக்கம்
x

image courtesy:PTI

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி. மற்றும் ஆசிய தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

கராச்சி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்.14-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இதனிடையே இந்த தொடரில் திட்டமிட்ட படி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் அண்மையில் முடிவடைந்த லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்தது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட இந்தியா சாம்பியன்ஸ் அணி மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரையிறுதியிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் உருவானது. அந்த போட்டியிலும் இந்திய அணி விலகியதால் பாகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. பல இந்திய முன்னாள் வீரர்கள் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய விளையாட கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனைவருக்குமே தேசப்பற்று இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதற்காக விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தம்முடைய வாழ்நாளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை பார்க்க விரும்புவதாகவும் அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு, “ஆசியக் கோப்பை அட்டவணை வெளியானதும் எதிர்வினைகள் வந்தன. ஆனால் பாகிஸ்தானில் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் நாங்கள் நன்றாக இருப்போம். ஆனால் விளையாட்டு தொடர வேண்டும். விளையாட்டில் அரசியல் தவிர்க்கப்பட வேண்டும், நான் அரசியல்வாதி கிடையாது.

அவர்கள் அவர்களுடைய நாட்டின் மீது பற்றுடன் இருக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய நாட்டின் மேலே பற்றோடு இருக்கிறோம். அதைத் தாண்டி செல்ல வேண்டாம். உங்கள் நாட்டின் வெற்றிகளைப் பற்றி பேசுங்கள். பாகிஸ்தானுக்கும் இதுவே பொருந்தும், இந்தியாவிற்கும் இதுவே பொருந்தும். அதை சொல்வதை விட செய்தல் கடினமானது. என்னுடைய வாழ்நாளில் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடைபெறுவதைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன்” என கூறினார்.

1 More update

Next Story