அந்த இளம் இந்திய வீரரை நான் பாராட்டத்தான் செய்தேன்.. ஆனால் அது தவறாக.. - பென் டக்கெட்


அந்த இளம் இந்திய வீரரை நான் பாராட்டத்தான் செய்தேன்.. ஆனால் அது தவறாக.. - பென் டக்கெட்
x
தினத்தந்தி 17 Aug 2024 6:28 PM GMT (Updated: 18 Aug 2024 6:50 AM GMT)

தங்களுடைய அணுகுமுறையை பார்த்துத்தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக பென் டக்கெட் தெரிவித்தார்.

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 4 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

முன்னதாக அந்தத் தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் விளாசி இங்கிலாந்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் மிகவும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்தை தெறிக்க விட்டார்.

ஆனால் அப்போது தங்களுடைய "பேஸ் பால்" அணுகுமுறையை பார்த்துத்தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்தார். எனவே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதற்கான பாராட்டு தங்களையும் சேரும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு நாசர் ஹுசைன் , மைக்கேல் கிளார்க், ரவி சாஸ்திரி போன்ற ஏராளமான முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த வீரரான ஜெய்ஸ்வாலை யாரும் அதிகம் பாராட்டுவதில்லை என்றுதான் தாம் சொன்னதாக பென் டக்கெட் கூறியுள்ளார். இருப்பினும் அதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு விமர்சித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"உண்மையில் ஜெய்ஸ்வாலுக்கு நான் நல்ல பாராட்டைக் கொடுத்தேன். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று நான் உறுதியாக சொல்வேன். ஆனால் அவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரைப் பற்றி நான் 5-வது டெஸ்ட் போட்டியில் தான் அப்படி சொன்னேனா? இல்லை. ஏனெனில் அவர் தொடர் முழுவதும் அப்படித்தான் நம்ப முடியாத வகையில் அற்புதமாக விளையாடினார்" என்று கூறினார்.


Next Story