பள்ளியில் கூட நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை.. ஆனால்.. - 2019 சர்ச்சை குறித்து கே.எல்.ராகுல்


பள்ளியில் கூட நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை.. ஆனால்.. - 2019 சர்ச்சை குறித்து கே.எல்.ராகுல்
x

image courtesy: AFP

தினத்தந்தி 24 Aug 2024 9:24 AM GMT (Updated: 24 Aug 2024 9:27 AM GMT)

2019-ல் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவு படுத்தும் வகையில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் தற்போது துலீப் கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினர். அதாவது பிரபல பாலிவுட் தொலைக்காட்சியில் காபி வித் கரன் ஜோகர் எனும் நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் நிறைய ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். அதே போல ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் அவர்களை கடுமையாக விமர்சித்தார்கள்.

அதனால் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் எதிர்ப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பிசிசிஐ அதிரடியான தடை விதித்தது.

இந்நிலையில் அந்த பேட்டிக்கு பின் தாம் முழுவதுமாக மாறிவிட்டதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன். அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது. அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது.

அதன் காரணமாக நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை. அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது கூட எனக்கு தெரியவில்லை. பள்ளியில் கூட எனது பெற்றோர்கள் வந்து பதில் சொல்லும் அளவுக்கு எப்போதும் நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை" என்று கூறினார்.


Next Story