இந்தியாவுக்கு எதிராக தோல்வி - இலங்கை கேப்டன் அசலங்கா கூறியது என்ன..?

Image Courtesy: @ACCMedia1
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர். பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி கண்ட பின்னர் இலங்கை கேப்டன் அசலங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த போட்டி மிகச் சிறப்பாக இருந்தது. வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பந்துவீசும் வரை போட்டி எங்கள் வசம் தான் இருந்தது. அவர்கள் மிடில் ஓவர்களை சிறப்பாக வீசியதாலயே எங்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை
இருந்தாலும் இந்த போட்டியில் பதும் நிசாங்கா மிகச் சிறப்பான இன்னிங்ஸை விளையாடியிருந்தார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து நிறைய விசயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்.
இந்த ஆசிய கோப்பை தொடரில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து நிச்சயம் இனி வரும் தொடர்களில் என் நல்ல பாசிட்டிவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.






