சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா... முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்


சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா... முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: AFP

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சாண்ட்னெர் 7 விக்கெட் வீழ்த்தினார்.

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியை சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்திருந்தது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா அணியினர், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் கில் 30 ரன்னிலும், ஜெய்வால் 30 ரன்னிலும், கோலி 1 ரன்னிலும், பண்ட் 4 ரன்னிலும், சர்பராஸ் கான் 11 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும், ஜடேஜா 38 ரன்னிலும், ஆகாஷ் தீப் 6 ரன்னிலும், பும்ரா ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சாண்ட்னெர் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆட உள்ளது.


Next Story