பெங்களூரு டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு


பெங்களூரு டெஸ்ட்:  மழையால் ஆட்டம் பாதிப்பு
x

சர்பராஸ் கான் 125 ரன்களும், ரிஷப் பண்ட் 53 ரன்களும் ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார் . இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது .சர்பராஸ் கானுடன் ரிஷப் பண்ட் இணைந்தார் . இருவரும் சிறப்பாக விளையாடினர் . குறிப்பாக சர்பராஸ் கான் பந்துகளை பவுண்டரி , சிக்ஸருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் சதமடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும்.

தொடர்ந்து இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர் . சதமடித்த பிறகு சர்பராஸ் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார் . குறிப்பாக அஜாஸ் படேலின் ஓவரில் ரிஷப் பண்ட் 2 சிக்ஸர்கள் பறக்க விட்டார் . சிறப்பாக விளையாடி அவர் அரைசதம் அடித்தார் . இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது . சர்பராஸ் கான் 125 ரன்களும், ரிஷப் பண்ட் 53 ரன்களும் ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்


Next Story