இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சாத் ஷகீல் அபார சதம்.. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பாகிஸ்தான்


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: சாத் ஷகீல் அபார சதம்.. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பாகிஸ்தான்
x

image courtesy: twitter/@ICC

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 267 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ராவல்பிண்டி,

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 68.2 ஓவர்களில் 267 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டுகளும், நமன் அலி 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன் அடித்திருந்தது. கேப்டன் ஷான் மசூத் (16 ரன்), துணை கேப்டன் சாத் ஷகீல் (16 ரன்) களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சாத் ஷகீல் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். சாத் ஷகீல் 134 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் நோமன் அலி 45 ரன்களும், சஜீத் கான் 48 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 77 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 24 ரன்களுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரூட் 5 ரன்களுடனும், ஹாரி புரூக் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.



Next Story