மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி


மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
x
தினத்தந்தி 3 Jun 2024 7:08 PM GMT (Updated: 4 Jun 2024 10:34 PM GMT)

பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டியை கடந்தது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

Live Updates

  • 3 Jun 2024 8:25 PM GMT

    முன்னணி நிலவரங்கள்

    வாக்குகள் எண்ணப்படும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டு இருக்கும். 19 முதல் 24 சுற்றுகள் வரை எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும், வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு என்பது முறைப்படி அறிவிக்கப்படும்.

    காலை 8 மணிக்கே வாக்குகள் எண்ணும் பணி தொடங்குவதால், காலை 11 மணியில் இருந்தே முன்னணி நிலவரங்கள் வெளிவரத்தொடங்கிவிடும்.

  • தபால் ஓட்டுகள்
    3 Jun 2024 7:36 PM GMT

    தபால் ஓட்டுகள்


    முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் பற்றி உடனடியாக அறிவிக்கப்படும்.

    அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னதாக ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும் எடுத்துவரப்பட்டு, அதில் வைக்கப்பட்டு இருந்த ‘சீல்’ சரியான முறையில் இருக்கிறதா என்பது அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வாக்குகள் எண்ணப்படும்.

  • இன்று ஓட்டு எண்ணிக்கை
    3 Jun 2024 7:10 PM GMT

    இன்று ஓட்டு எண்ணிக்கை


    நமது நாட்டில் 18-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முடிவடைந்துவிட்டதால், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

    இதேபோல் ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

    முன்னதாக ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்களில் ஏதாவது ஒரு எந்திரம் எடுக்கப்பட்டு வி.வி.பாட் எந்திரத்துடன் பதிவான வாக்குகள் சரியாக இருக்கிறதா என்பதை அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தபடும். அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.


Next Story